Friday, July 07, 2006

199: மடப்புரம் பத்ரகாளி

மதுரை செல்லும் போது, கிராம தெய்வத்தை, க்ஷேத்திர தெய்வத்தை, குல தெய்வத்தை என்று எல்லோரையும் வணங்க வேண்டும் என்று எண்ணுவேன், க்ஷேத்திர தெய்வத்தை வலம் வந்து விட்டேன், இப்பொது எல்லை தெய்வத்தை வலம் வருகிறென்.


நீதிமன்றத்தில் சாட்சி சொல்ல வருபவர்களிடம் சத்தியமாச் சொல்றேன் என்று சத்தியப் பிரமாணம் வாங்குவது தற்போதைய நடைமுறை. ஆனால், நீதிபதிகளே கோயிலுக்கு வந்து குற்றம்சாட்டப்பட்டவர்களைக் காளிக்கு முன்பாக சத்தியம் பண்ணவைத்து தீர்ப்பெழுதிய சம்பவங்கள் மடப்புரம் காளி கோயிலில் நடந்திருக்கின்றன.

சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்துக்கு அருகிலிருக்கிறது மடப்புரம். இங்கு வளைந்தோடும் வைகையின் விளிம்பில் ஆக்ரோஷ அவதாரமாக நிற்கிறாள் பத்ரகாளி.

ஒரு பிரளய காலத்தில் மதுரை மாநகரை வெள்ளம் சூழ்ந்தபோது மதுரையை ஆட்சி செய்த மீனாட்சி, மதுரையின் எல்லையைக் காட்டச் சொல்லி சிவனை வேண்டினார். அப்போது ஆதிசிவன் பாம்பு வடிவில் தோன்றி மதுரையின் நான்கு புறத்தையும் தன் உடலால் வளைத்துக் காட்டினார். அப்போது பாம்பின் படமும் அதன் வாலும் ஒன்றையன்று தொட்டுக்கொண்டு நின்ற இடம்தான் படப்புரம் எனப்பட்டது. இதுவே மருவி மடப்புரமாக ஆனது.

ஒருமுறை பார்வதியை அழைத்துக்கொண்டு வேட்டைக்குக் கிளம்பிய சிவபெருமான், மடப்புரம் பகுதிக்கு வந்தார். காடு மிகப் பரந்து கிடக்கிறது. இதற்குமேல் உன்னால் வரமுடியாது தேவி... அதனால் நீ இங்கேயே இரு. நான் மட்டும் வேட்டையாடிவிட்டு வருகிறேன் என்று பார்வதியிடம் சொன்னாராம். ‘இந்த அடர்ந்த காட்டுப் பகுதியில் நான் மட்டும் தனியே இருப்பது எப்படி?’ என்று பார்வதி கேள்வி எழுப்ப, அய்யனாரை அழைத்து பார்வதிக்குத் துணையாக வைத்துவிட்டுப் போனார் சிவபெருமான். அப்போது பார்வதி, இந்த இடத்தில் நான் இருப்பதால் இந்த ஸ்தலத்துக்கு ஏதாவது சிறப்பைக் கொடுக்கவேண்டும் என்று கேட்க, இந்த இடத்திலிருந்து மூன்று மைல் தொலைவில் இருக்கும் வைகையாற்றில் நீராடுபவர்களுக்கு காசியில் நீராடியதைக் காட்டிலும் கூடுதலான புண்ணியம் கிடைக்கும்! என்று வரம் கொடுத்தாராம் சிவபெருமான்.

அதன்பின்தான் மடப்புரத்தில் காளிவடிவில் தங்கினாள் சக்தி. காளிக்குத் துணையாக இருந்த அய்யனார் அடைக்கலம் காத்த அய்யனாராக இங்கே ஆட்சி செலுத்தினாலும், சக்தியின் வடிவமாக நின்றுகொண்டிருக்கும் பத்ரகாளிக்குத்தான் பிரதான வழிபாடு!

சிவபெருமான் அருளிய வரத்தின்படி மடப்புரத்திலிருந்து மூன்று மைல் தொலைவுக்குள் வைகையில் நீராடுபவர்களுக்கு காசியில் நீராடியதைக் காட்டிலும் கூடுதலான புண்ணியம் கிடைக்கும் என்ற நம்பிக்கை இன்றும் தொடர்கிறது. காசு, பணம் செலவு செய்து காசிக்குப் போக முடியாதவர்கள் மடப்புரத்தை ஒட்டியுள்ள திருப்புவனத்துக்கு வந்து தங்களின் முன்னோர்களுக்குக் காரியங்கள் செய்து புண்ணியம் சேர்த்துக்கொண்டு போவது இன்றும் நடக்கிறது.

கோயில் வளாகத்துக்குள் வெட்டவெளியில் கூரைகூட இல்லாமல் நாக்கைத் துருத்தியபடி ஆக்ரோஷமாக நிற்கிறாள் பத்ரகாளி. காளியின் இரண்டு பக்கமும் பிரமாண்டமாக இரண்டு பூதங்கள். பதின்மூன்றடி உயரம் கொண்ட காளியின் தலைக்குமேல் ராட்சதக் குதிரை ஒன்று தாவியபடி நிற்கிறது.

காளியை மனமுருகி வேண்டி நின்ற பக்தர் ஒருவர் எந்த நேரமும் உனக்குப் பக்கத்திலேயே இருக்க எனக்கு வரம் கொடுக்கவேண்டும் என்றாராம். அவரது பக்தியை மெச்சிய காளி அவரைக் குதிரையாக மாற்றி, தனக்கு நிழல்தரும் குடையாக வைத்துக்கொண்டாராம். தன்னை நாடிவரும் பக்தர்களைத் தாமதமின்றிக் காப்பாற்ற ஆயத்த நிலையில் காளியின் வலதுகையில் திரிசூலம். அநீதியை அழிக்கத் திரிசூலம் ஏந்திநிற்கும் காளி, அழித்தவற்றை மீண்டும் எழவிடாமல் எரித்துச் சாம்பலாக்குவதற்காகத் தலையில் அக்னி கிரீடத்தைச் சுமந்து நிற்கிறாள்.

காளிக்கு எதிரே உள்ள மண்டபத்தில் நெய்விளக்கு ஏற்றி வழிபட்டுவந்தால் நினைத்த காரியம் கைகூடி வரும். காளிக்குப் பிடித்தமான காணிக்கைப்பொருள் எலுமிச்சம்பழ மாலைதான். காளிக்கு மட்டும் போடக்கூடிய மாலையில் நூற்றியோரு பழங்கள் கோக்கிறார்கள். குதிரைக்கும் சேர்த்து மாலை போடுவதென்றால் ஆயிரத்தோரு பழங்களைக் கோக்கவேண்டியிருக்கும்.

மடப்புரத்தைச் சுற்றியுள்ள கிராமங்களில் யாருக்காவது கொடுக்கல், வாங்கல் பிரச்னை என்றால் பெரும்பாலும் கோர்ட்டுக்கோ போலீஸக்கோ போவதில்லை. அவர்கள் நாடிவரும் கோர்ட், பத்ரகாளி கோயில்தான்.

காளிக்கு வலப்புறத்தில் சின்னதாக ஒரு திண்டு. இதன் பெயர் சத்தியக்கல். இரண்டு நபர்களுக்கிடையே பிரச்னை என்றால், இந்தத் திண்டில் இருவரும் சூடத்தை ஏற்றி, அணைத்து நாங்கள் தப்புச் செய்யவில்லை என சத்தியம் செய்யவேண்டும். பின்னர் கழுத்தில் அரளிமாலை போட்டுக்கொண்டு காளிக்கு வலப்புறமாக நிற்கும் பூதத்தைக் கட்டிப் பிடிதபடி, நாங்கள் தப்பு செய்யவில்லை என வாக்குக் கொடுக்க வேண்டும்.

இங்கு யாராவது பொய்ச் சத்தியம் செய்தால் முப்பது நாட்களுக்குள்ளாக அந்த நபரைக் குறைகேட்டுவிடுமாம் காளி. சில நேரம் பொய்ச் சத்தியம் செய்தவர்கள் மடப்புரத்து எல்லையைத் தாண்டுவதற்குள்ளாகவே காளியால் தண்டிக்கப்படுவதுண்டு. இப்படித் தண்டிக்கப்படுபவர்கள் மறுபடியும் காளியிடம் வந்து காணிக்கை செலுத்திப் பரிகாரம் தேடிக்கொண்டு போவது இப்போதும் நடக்கிறது.



இங்கு நடக்கும் இன்னொரு முக்கியமான வேண்டுதல் காசு வெட்டிப் போடுவது. காளியின் முகத்துக்கு எதிரே தரையில் ஒரு பட்டியக்கல் பதித்து வைத்திருக்கிறார்கள். அதற்குப் பக்கத்திலேயே உளியும் சுத்தியலும் வைத்திருக் கிறார்கள். அநியாயம் பண்ணுபவர்களைத் தட்டிக்கேட்க திராணி இல்லாதவர்கள் ஈரத்துணியுடன் இங்கு வந்து காளிக்கு எதிரே உட்கார்ந்து காசை வெட்டிப் போட்டு, அவங்களை எதுத்துக் கேக்க எனக்கு சக்தியில்லை. நீதான் எனக்கு கேட்டுக் கொடுக்கணும் என்று கண்ணீரும் கம்பலையுமாக முறையிடுகிறார்கள். இந்தக் கண்ணீருக்கு மனமிரங்கிவரும் காளி, அநியாயக்காரர்களை அடித்து எழுப்பி இம்சை பண்ணி அவர்களையும் தன்னுடைய வாசலுக்கு வரவழைத்து விடுகிறாள்.

காளியின் மகத்துவம் தெரிந்த எவரும் இங்கு வந்து பொய்ச்சத்தியம் பண்ணத் துணிவதில்லை.

காளிக்குப் பின்னால் பிராகாரத்தில் வேப்பமரம் ஒன்று உண்டு. இதற்கும் தெய்வசக்தி இருக்கிறது.
நீண்டநாட்களாகத் திருமணம் தடைப்பட்டு நிற்கும் பெண்கள் இந்த மரத்தின் மடியில் மஞ்சள் தாலியைக் கட்டி வழிபட்டால் திருமணத் தடைகள் நீங்குகின்றன. குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள், தங்களின் முந்தானையைக் கிழித்து வேப்பமரக்கிளையில் தொட்டில் கட்டி விட்டால் தாமதிக்காமல் அவர்களது வீட்டில் குவா&குவா சத்தம் கேட்கிறது. வேப்பமரத்தில் கட்டப்பட்டுள்ள தாலி மற்றும் தொட்டில்களின் எண்ணிக்கை இதையெல்லாம் பறைசாற்றுகின்றன.

எல்லா நாட்களும் காலை ஆறு மணி முதல் இரவு ஒன்பது மணி வரை கோயில் திறந்திருக்கிறது.

வெள்ளி, செவ்வாய்க்கிழமைகளில் இங்கே திருவிழா கணக்காகக் கூட்டம் கூடுகிறது. வாரத்துக்கு இரண்டு நாட்கள் இப்படித் திருவிழாக் கூட்டம் கூடுவதாலோ என்னவோ, பத்ரகாளிக்கென இங்கே தனியாக திருவிழா எதுவும் எடுக்கப்படுவதில்லை.

அடுத்த பதிவு, கூன் பாண்டியணுக்கு மருத்துவம் செய்ய திருநீறு தந்த தென் திருவாலய கோவில்.

11 comments:

துளசி கோபால் said...

நல்ல விவரமான பதிவு.

அடுத்தமுறை மதுரைக்கு வரும்போது
போகவேண்டிய கோயில்.
மனக்கணக்குலே எழுதி வச்சுருக்கேன்.

சிவமுருகன் said...

அம்மா, நீங்க போனதில்லையா? ஓ அடுத்த தடவை மறுபடியும் பொகணும்ன்னு சொல்றீங்களோ?

வருகைக்கும் பின்னூட்டத்திற்க்கும் நன்றி.

G.Ragavan said...

ஏழைகள் வயிறெரிந்தால் ஆண்டவன் சும்மாயிருக்க மாட்டான் என்பதற்கு ஏற்ற இடம். அங்க போயி யாராவது நம்ம நாட்டு அரசியலும் போலீசும் இப்பிடி இருக்குதேன்னு என்னோட சார்பா காசு வெட்டிப் போடுங்கப்பா!

சிவமுருகன் said...

இராகவன்,
//ஏழைகள் வயிறெரிந்தால் ஆண்டவன் சும்மாயிருக்க மாட்டான் என்பதற்கு ஏற்ற இடம். அங்க போயி யாராவது நம்ம நாட்டு அரசியலும் போலீசும் இப்பிடி இருக்குதேன்னு என்னோட சார்பா காசு வெட்டிப் போடுங்கப்பா!//

இந்த சிறிய பணிக்கு இவள் எதுக்கு, இவளருகில் இருக்கும் பூதத்திடம் சொன்னாலே போதும்

தி. ரா. ச.(T.R.C.) said...

நல்ல தரமான செய்திகளை தந்திருக்கிறீர்கள். படிக்கும்போதே கோவிலுக்கு போகவேண்டும் என்ற எண்ணம் மனத்தில் எழவைத்துவிட்டீர்கள். தி ரா ச

குமரன் (Kumaran) said...

மடப்புரத்தைப் பற்றிய மிக விவரமான விரிவான பதிவு சிவமுருகன். நான் இரண்டே இரண்டு முறை தான் போயிருக்கிறேன். ஐயனார் என்று யார் சொன்னாலும் எனக்கு உடனே நினைவிற்கு வருவது அடைக்கலம் காத்த ஐயனார் தான்.

காசு வெட்டிப் போடுவது சட்டவிரோதம் என்று ஒரு தடை வந்ததே. இன்றும் காசு வெட்டிப் போடுகிறார்களா?

சிவமுருகன் said...

தி ரா ச,

//நல்ல தரமான செய்திகளை தந்திருக்கிறீர்கள். படிக்கும்போதே கோவிலுக்கு போகவேண்டும் என்ற எண்ணம் மனத்தில் எழவைத்துவிட்டீர்கள். தி ரா ச //

எல்லாம் அவள் செயல், இவரும் ஒருவித்தில் மீனாக்ஷி தான், பச்சை நிறம் தாங்கி அல்லவா இருக்கிறார்.

சிவமுருகன் said...

அண்ணா,
//மடப்புரத்தைப் பற்றிய மிக விவரமான விரிவான பதிவு சிவமுருகன். நான் இரண்டே இரண்டு முறை தான் போயிருக்கிறேன். ஐயனார் என்று யார் சொன்னாலும் எனக்கு உடனே நினைவிற்கு வருவது அடைக்கலம் காத்த ஐயனார் தான்.//

சரியாக சொன்னீர்கள், ஐயனார் என்றால் அது நம்மவர்களுக்கு (மதுரை காரர்களுக்கு) அடைகலம் காத்த ஐயனார் தான் நினைவிற்க்கு வருவார்

//காசு வெட்டிப் போடுவது சட்டவிரோதம் என்று ஒரு தடை வந்ததே. இன்றும் காசு வெட்டிப் போடுகிறார்களா? //

எனக்கு கேட்க திரனி இல்லை நீயே கேள் என்று தெய்வத்திடம் சொல்வது சட்டப்படி குற்றம் என்று சொன்னால், எனக்கு கேட்க திரணி இல்லை நீங்கள் கேளுங்கள் என்று கோர்ட்டுக்கு போவதும் குற்றம் தானே?

பிரதீப் said...

அருமையாச் சொன்னீங்க! நம்ம ஊருப்பக்கம் காளின்னாலே மடப்புரம் காளிதான். ஏதாச்சும் குடும்பச் சண்டையில ரொம்பப் பெரிசா ஏதாச்சும் நடந்து போச்சுன்னாக் காசு வெட்டிப் போடுறேன்னு மெரட்டுவாக. அம்புட்டுதேன்! அடுத்த ஆளு அப்படியே பணிஞ்சிருவாக.

////
எனக்கு கேட்க திரனி இல்லை நீயே கேள் என்று தெய்வத்திடம் சொல்வது சட்டப்படி குற்றம் என்று சொன்னால், எனக்கு கேட்க திரணி இல்லை நீங்கள் கேளுங்கள் என்று கோர்ட்டுக்கு போவதும் குற்றம் தானே?
///
நீங்களே வக்கீலாப் போயிருக்க வேண்டியவரு... தெரியாத்தனமா கணிப்பொறியில நொழைஞ்சுட்டீங்களா?

குமரன் (Kumaran) said...

மேல் முறையீடு செய்றது குற்றம்ன்னு சொல்லலைங்க. இந்திய அரசின் உடைமையான பணத்தை (கரன்ஸியை) அழிப்பது சட்டவிரோதம்ன்னு படிச்சிருக்கேன். அந்த சட்டத்தை வச்சு தடை உத்தரவு போட்டாங்கன்னும் படிச்சிருக்கேன். ஆனா மக்கள் நம்பிக்கையை அவ்வளவு எளிதா தடை சட்டம் எல்லாம் போட்டு அழிச்சுட முடியாது. சட்டத்தை நிறைவேத்த வேண்டயவங்களே அந்த நம்பிக்கையோட இருப்பாங்க.

sathiyabal said...

கடந்த சில நாட்களுக்கு முன் மடப்புரம் கோவிலுக்குச் சென்று தரிசனம் செய்து வந்தோம்.அங்கு பத்ரகாளியின் முன்பாக ஒரு பெண் அங்கேயிருந்த ஒரு கல்லில் ஒரு ஒரு ரூபாய் நாணயத்தை வைத்து, அங்கேயே தயாராக வைக்கப்பட்டிருந்த இரும்பு உளியையும் சுத்தியலையும் எடுத்து அந்தக் காசை இரண்டாக வெட்டிப் போட்டு விட்டு, முகத்தில்கொப்பளிக்கும் கோபத்தோடு 'விடு விடு' வென நடந்து சென்றார்.அந்த சம்பவம் எனக்குப் புதிராகவே இருந்தது.உங்களுடைய இடுகை மூலம் இதுதான் 'காசு வெட்டிப் போடுவது' என்பதுவும் அதன் மகிமையையும் அறிந்து கொண்டேன். நன்றி.
பி.கு. நமது இந்தியத் திரு நாட்டில் அரசியல்வாதிகள் பலர் செய்யும் அக்கிரமங்களைப் பார்க்கும் பொழுது எவ்வளவு காசுகளை வெட்டிப் போடுவது என்று பிரமிப்பாக உள்ளது!!
சத்தியபால் , மதுரை